பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கான க்கூட்டம்

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கான க்கூட்டம்


புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உபக்குழுவின் ஐந்தாவது அமர்வு, ஆகியன கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 2026.05.06 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான கொள்கை வகுப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ அவர்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்த அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய விரிவான அறிக்கை இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து பிரதான தூண்களை உள்ளடக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழுக்கள் பற்றிய தகவல்கள், கற்றல் அலகுகளைத் (Modules) தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்தல் உள்ளிட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உபகரண வசதிகளின் அபிவிருத்தி குறித்த புள்ளிவிபரத் தரவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களைக் கண்காணிப்பதற்காக வகுக்கப்படும் முறையான வேலைத்திட்டத்தில் ஆசிரியர் ஆலோசகர்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, டிஜிட்டல் செயலணியின் பரிந்துரைகளுக்கமைய பாடசாலைகளில் தொழில்நுட்ப உபகரணங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தக் கற்றல் செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களின் அறிவு மற்றும் திறன்கள் வளர்ச்சியடையும் மட்டத்தை அளவிடுவதற்குத் துல்லியமான மதிப்பீட்டு முறையொன்று பயன்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், கற்றல் அலகுகளை மீளாய்வு செய்யும் செயற்பாட்டின் போது, அந்தந்த பாடங்கள் தொடர்பாக விசேட அறிவுடைய தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாகக் கற்பித்தல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகள் குறித்துச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உபக்குழுவின் உறுப்பினர்களான ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஞானமுத்து ஸ்ரீநேசன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post