பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டு: கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு மாணவர் வழக்கு

பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டு: கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு மாணவர் வழக்கு  




 கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் டிப்ளோமா படிப்பைப் பயின்ற சனத் குமார் அத்துகோரள என்ற மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தேர்வு முறைகேடுகள் காரணமாகத் தனது நேரம், உழைப்பு மற்றும் பணம் வீணானதாகக் கூறி, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடமிருந்து ரூ. 50 லட்சம் நஷ்டஈடு பெற்றுத்தருமாறு கோரி நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


ஆரம்பத்தில் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் எவ்வித தேர்வும் நடத்தப்படாமல் தேர்ச்சியடைந்ததாக அறிவித்து பல்கலைக்கழக அதிகாரிகளால் பட்டமளிப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளதாக மனுதாரரான மாணவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஆரம்பத்தில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் தேர்வு நடத்தாமல் தேர்ச்சியடையச் செய்தது எவ்வாறு என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை தமக்கு நியாயமான எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தே இவர் இந்த நஷ்டஈட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், மற்றொரு மாணவர் மூலமாகத் தனது கணக்கில் ரூ. 80,000 வைப்பு செய்யுமாறு கோரியதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்குப் பணம் கொடுக்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தன் மீது கொண்ட கோபத்தினால் தன்னைத் தேர்வில் தோற்கடித்ததாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டத்தரணி தனோஷா பெரேரா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் நிதிப் பீடத்தின் விரிவுரையாளர்களான டி.சி.எல். தியகுஆரச்சி, டபிள்யூ.பி. பிரேமரத்ன, துறைத் தலைவர் சஷிகா அபேதீர மனோரத்ன, பீடாதிபதி எச்.எம். நிஹால் ஹென்னாயக்க, தேர்வுப் பிரிவின் மேலதிக பதிவாளர் வஜிரா ஹபூஹின்ன ஜெயரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எச்.டி. கருணாரத்ன, தற்போதைய உபவேந்தர் இந்திக மகேஷ் கருணாதிலக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

  • படிப்பில் சேர்ந்தமை: கொழும்பு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்படும் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளோமா படிப்பை (2022/2023) பயில்வதற்காகச் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கு அமையத் தான் சேர்க்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

  • பிரச்சினையின் தொடக்கம்: முதலாம் கல்வியாண்டில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாத போதிலும், இரண்டாம் கல்வியாண்டில் 508 பாடமான 'சிறு வணிகங்களுக்கான செயல்பாட்டு மேலாண்மை' மற்றும் 510 பாடமான 'வணிக உத்தி மற்றும் நிலைத்தன்மை' ஆகிய பாடங்களின் போது தனக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

  • பணக் கோரிக்கை மற்றும் சர்ச்சை: 508 பாடத்தைக் கற்பித்த விரிவுரையாளர் டி.சி.எல். தியகுஆரச்சி, ஒரு மாணவர் மூலம் அவசரப் தேவை எனக் கூறித் தனது கணக்கில் ரூ. 80,000 வைப்பு செய்யுமாறு கோரியதாகவும், அதற்குத் தான் உடன்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

  • விடுதி அறைச் சம்பவம்: இதன் பின்னர், மே 18 மற்றும் 19 (2024) ஆகிய தேதிகளில் கிரிஎல்ல விஜி ரிசார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் பயிலரங்கிற்கு விரிவுரையாளரின் கணவரும் வந்திருந்தார். மற்றொரு மாணவர் வந்து விரிவுரையாளரின் கணவரைத் தனது அறையில் தங்க வைக்குமாறு கோரியபோது, தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதனால் அவர் தன் மீது பகைமை கொண்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

  • தேர்வு முறைகேடுகள்:

    • இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வில், 508 பாடத்திற்குரிய வழக்கமான புள்ளி வழாங்கள் நடைமுறையிலிருந்து விலகி, பழிவாங்கும் நோக்கில் தன்னிச்சையாகக் குறைந்த புள்ளிகளை வழங்கித் தன்னைத் தோற்கடித்ததாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • மேலும், தேர்வுக்கு முன்னரே அக்கேள்விகளை வேறு சில மாணவர்களுக்கு அந்த விரிவுரையாளர் கசியவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

  • மீண்டும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி: 2025 ஜனவரியில் தான் தோற்கடிக்கப்பட்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ததாகவும், பின்னர் 2025 ஏப்ரலில் தான் உட்படச் சில மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாகப் புதிய முடிவுப் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அப் பாடத்திற்கு எவ்வித தேர்வும் நடத்தப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • குழுத் திட்ட முறைகேடு: 510 பாடத்திற்கான வெளிக்களச் செயல்பாடாக ஒரு மாணவரிடமிருந்து ரூ. 3,500 வீதம் வசூலிக்கப்பட்டு குழுத் திட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிலர் பணமும் கொடுத்துச் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர்; ஆனால் குறிப்பிட்ட சிலர் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்கவில்லை. எனினும், பங்கேற்ற மாணவர்களுக்கும் பங்கேற்காத அம்மாணவர்களுக்கும் முழுமையான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

  • சட்ட நடவடிக்கை: முறையான புள்ளி வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால் தனக்கு உயர் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்றும், விரிவுரையாளர்களின் இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான செயல்களால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பல்கலைக்கழக உயர் நிர்வாகத்திற்கும் லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கும் தான் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.

  • நஷ்டஈட்டுக் கோரிக்கை: பல்கலைக்கழக அதிகாரிகளின் இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளால் தனது நேரம், உழைப்பு மற்றும் பணம் வீணாகியுள்ளதாகவும், நண்பர்கள் மத்தியில் தான் பரியாகாசம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மனுதாரர் சனத் குமார் அத்துகோரள, தனக்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்காக ரூ. 50 லட்சம் நஷ்டஈட்டைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post