இலங்கையில் 44% அரச பாடசாலை ஆசிரியர்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிப்பு: ரஜரட்ட பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
இலங்கையிலுள்ள அரச பாடசாலை ஆசிரியர்களில் நூற்றுக்கு 44 வீதமானோர் (44%) கடுமையான மன முறிவிற்கும் (Burnout) மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது ரஜரட்ட பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும், அவர்களின் இந்த மனநிலை வீழ்ச்சிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 238 ஆசிரியர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 81% க்கும் அதிகமானோர், தங்களது மாதாந்த வருமானம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக, 77% ஆசிரியர்கள் தங்களின் அத்தியாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் 78% க்கும் அதிகமானோர் மேலதிக வருமான வழிகளைத் தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களில் 30.4% சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் சமூக ரீதியாகத் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், பதகளிப்பு (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மனநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மாதாந்தம் எந்தவொரு சேமிப்பும் இல்லாதிருத்தல் மற்றும் அன்றாடச் செலவுகளைக் கட்டாயமாகக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டமையே இவர்களின் மனநலம் சீர்குலைவதற்குக் பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாகத் தங்களது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டமை, இவர்களின் மனநலப் பாதிப்பை நேரடியாகப் பாதித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஆசிரியர்களுக்காக அவசர நிதிக் கொள்கை மறுசீரமைப்புகளை மேற்கொள்வதோடு, அவர்களுக்கு முறையான மனநல ஆலோசனைச் சேவைகளை (Counselling) வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என மனநல மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags
செய்திகள்
